Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, December 15, 2015

புழக்கத்தில் இருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள் - அசனம்

திருத்தம்:
1. இந்தப் பதிவு முதலில் சங்கச் சொற்கள் என்று தவறாகத் தலைப்பிடப் பட்டிருந்தது. ஏலாதி நூல் பதிணென்கீழ்க் கணக்குத் தொகையில் வருவது. சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலம். அதனால் சங்கம் என்பதைப் பழந்தமிழ் என்று மாற்றி விட்டேன்.

2. அசனம் என்பது வடமொழிச் சொல் என்று பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

அசனம் என்ற சொல்லை நான் முதலில் கேட்டது நான்கு வருடங்களுக்கு முன்பு தான். என் கூட வேலை பார்த்த அந்தோணிசாமி அண்ணன் தான் கூறினார் “அண்ணே, இந்த வருஷம் புளியம்பட்டி அந்தோணியார் கோயில் திருவிழால அசனம் வச்சிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும்”

புளியம்பட்டி அந்தோணியார் கோயில் தூத்துக்குடி - திருநெல்வேலி கிறித்தவர்கள் மத்தியில் புகழ்பெற்றது. ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’ நாவலில் கூட வரும். ஆனால் அசனம் என்ற சொல் புதிதாக இருந்தது. இந்தப் பக்கங்களில் போர்த்துகீசியர் தாக்கத்தில் பல சொற்கள் இருக்கும். அது போல ஒரு புதிய சொல் என்று நினைத்தேன்.

“சரிண்ணே. வந்துடறேன். அசனம்ன்னா என்னண்ணே”

“உங்க கோயில்ல எல்லாம் அங்க வச்சு சமைச்சு சாப்பாடு போடறீங்கள்லண்ணே ,அது மாதிரி ஊர்லருந்து வண்டி கட்டிட்டுப் போய் அங்க கோயில் பக்கத்தில வச்சு சமைச்சு எல்லாருக்கும் சாப்பாடு போடறது. அன்ன தானம்னு வச்சுக்கங்களேன்”

எங்களூர் மலையக்கோயிலில் ’வடிச்சுப் போடுவது’ போல என்று நினைத்துக் கொண்டேன். திருவிழாவும் மலையக்கோயில் தைப்பூசம் போல் தான் இருந்தது. பாகு ஊறிய கருப்பட்டி மிட்டாயும், அசனம் என்ற சொல்லும் நினைவில் நின்றன.

சில மாதங்களுக்கு முன்பு tamilvu.org தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது பதிணென் கீழ்க் கணக்கில் ’ஏலாதி’ தென்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவே தெரியும். அதிலும் இதைப் படித்ததே இல்லை. சரி படித்துப் பார்ப்போமே என்று ஆரம்பித்தேன். அறிவுரை நூல் தான். அதில் மீண்டும் தென்பட்டது ‘அசனம்’

எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,
வள்ளே, துணியே, இவற்றொடு, கொள் என,
அன்புற்று, அசனம் கொடுத்தான்-துணையினோடு
இன்புற்று வாழ்வான், இயைந்து.

உரை : எள்ளே - எள்ளும், பருத்தியே - பஞ்சினாலாகிய அரை ஞாணும், எண்ணெய் - எண்ணெயும், உடுத்து ஆடை - உடுத்தும் ஆடையும், வள்ளே - பணமும், துணியே - போர்வையும், இவற்றோடு - ஆகிய இவற்றுடன், அசனம் - உணவும், கொள் என்ன - ஏற்றுக்கொள்வீர்களாக வென்று சொல்லி, அன்புற்று கொடுத்தான் - அன்புகூர்ந்து கொடுத்தவன், துணையினோடு இயைந்து - தன் மனைவி முதலிய சுற்றத்தாரோடு கலந்து, இன்புற்று வாழ்வான் - இன்பம் பொருந்தி வாழ்வான்.

எனக்குப் புதிதாகத் தெரிந்த சொல், இரண்டாயிரம் ஆண்டுகளாக அதே அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாஞ்சில் நாடன் சொல்வது போல வட்டார வழக்கு என்று சற்று இளக்காரமாக அழைக்கப்படும் வழக்குகள் தான் தமிழ்ச் சொற்களைப் பாதுகாத்து வருகின்றன.

tamilnation வலைத்தளத்தில் படித்த மேற்கோள் நினைவுக்கு வருகிறது “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் உள்ளது”.

Friday, October 23, 2015

சிவவாக்கியரும் பாரதியும்

தமிழ் இலக்கியத்தில் சித்தர் பாடல்கள் ஒரு தனி இழை. எத்தனை சித்தர்கள் இருந்தார்கள், பதிணென் சித்தர்கள் யார் யார் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. பொதுவாக இவர்கள் பாடல்கள் பெருமதங்களுக்கு எதிரான கருத்துக்களை நிறுத்துபவை.

சித்தர்களில் சிவவாக்கியர் சற்று தனித்து நிற்பார். எளிமையான சொற்கள், சட்டென்று பற்றிக்கொள்ளும் ஒரு தாளம், கூர்மையான சமூக விமர்சனம் ஆகியவை இவரது பாடல்களின் தனித்துவம். உருவ வழிபாட்டைத் தன் பாடல்களில் பலவாறு கிண்டல் செய்தவர். அவற்றில் ஒரு பாடல்

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே
ஒரு கல்லை இரண்டாய் உடைக்கிறீர்கள். அவற்றில் ஒன்றை வாசலில் பதித்து மிதிக்கிறீர்கள். இன்னொன்றைக் கடவுள் எனச் சிலை செய்து கும்பிடுகிறீர்கள். இவற்றில் ஈசனுக்குகந்த கல் எதுவென்று கிண்டல் செய்கிறார்.

பாரதியும் இந்த இரண்டு கல் கோட்பாட்டைக் கையிலெடுக்கிறான். ஆனால் அவனுக்குச் சக்தி தெய்வம்.  அதனால் தான் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகத்தில் பராசக்தியை வணங்கும் போது

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
  றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
  றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
  கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
  இருங்கலைப் புலவனாக் குதியே
என்று பாடுகிறான்.

 சிற்பி ஒரு கல்லை வாயிற்படி என்று மறைத்தான். இன்னொன்றைக் கடவுளின் வடிவமென்று உயர்த்தினான்.  நீ எல்லோருக்கும் தாய். யாரை எங்கே, எப்படி வைக்க வேண்டுமென்று உனக்குத் தெரியும். அதனால் உன்னைச் சரணடைந்தேன், என்னைப் புலவனாக்கு என்று வேண்டுகிறான்.

இன்று நான் இருக்கும் மனநிலையில் நான் சிவவாக்கியர் பக்கம் தான். ஆனால் இரண்டு பாடல்களையும் படிக்கும் போது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடலின் எதிரொலி இருபதாம் நூற்றாண்டுப் பாடலில் கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கேட்குமா என்பது சந்தேகம் தான்.