ஜெயமோகன் தளத்தில் தினமும் வெளிவரும் 'காவியம்' நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பித்த போது அவரது சமீப கால நாவல்களான ஆலம், படுகளம் போல அளவில் சிறியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஐம்பத்தி ஐந்து அத்தியாயங்கள் தாண்டி இன்னும் தொடர்கிறது.
கதையும் ஒரு அமானுஷ்யக் கதை போல் ஆரம்பித்து, ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதையாக மாறி, அங்கிருந்து பேருருக் கொண்டு யுகங்களுக்கு முன்னும் பின்னுமாய்ப் பாய்கிறது. ஒரு வட்டச் சுழலாய்க் கதை போகிறது. காலம் என்பதே நேர்க் கோடாய் இல்லாமல் முன்னும் பின்னும் சுற்றிச் சுற்றி வருகிறது. கதை சொல்லியான பைசாசிக கானபூதி துக்காராமிடம் பல நூற்றாண்டுக்கு முன் இருந்த குணாட்யரின் கதையைச் சொல்லுகிறது. பின் குணாட்யரிடம் துக்காராமின் கதையைச் சொல்லுகிறது. இதன் நடுவே மகாகாவியம் படைத்த வால்மீகி, வியாசரும் வருகிறார்கள்.
காவியம் இன்னும் முடியவில்லை, அதனால் விமர்சனக் கருத்து சொல்ல முடியாது. ஆனால் ஒன்று சொல்லலாம் - விஷ்ணுபுரம், கொற்றவை வரிசையில் வரும் நாவல் இது. அவற்றைத் தாண்டியும் செல்லக் கூடும்.
வால்மீகியும் வியாசரும் (அல்லது அவரது மாணவர் ரோமஹர்னர்) படும் துயரம் பற்றியே இந்தப் பதிவு. அவர்கள் படைத்த காவியம் அவர்களை மீறி வளர்கிறது, அவர்கள் எதிர்பார்க்கா திசைகளில் நீள்கிறது. அவர்களுக்கு அவர்கள் படைத்த காவியத்தின் மேல் உரிமை இல்லை. கானபூதி வால்மீகியிடம் சொல்வது போல் "அதன் பின் எத்தனையோ ராமாயணக் கதைகள், காலந்தோறும் ஒன்று. ஒன்று இன்னொன்றை மறுத்தும் திருத்தியும் திரித்தும் தன்னை உருவாக்கிக் கொண்டது. கதைகளுக்கு அப்படியொரு இயல்புண்டு, அவை கதைசொல்லியிடமிருந்து விலகிச்செல்லும். கதைசொல்லியைத்தான் அவை முதலில் நிராகரிக்கும்… "
இந்த நேரத்தில் நிக்கனோர் பார்ரா (Nicanor Parra) வின் கவிதை ஒன்றைப் படித்தேன். சிலே (Chile) தேசத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஸ்பானிஷ் கவிஞர். நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர். அமெரிக்க Beat கவிஞர்களுக்கு முன்னோடி. கணிதவியலாளர், இயற்பியல் பேராசிரியர். நெரூடாவால் ஸ்பானிஷ் மொழியின் சிறந்த கவிஞர் என்று பாராட்டப் பட்டவர். வழக்கம் போல சாரு நிவேதிதா தளத்தின் மூலம் தான் இவரைத் தெரிந்து கொண்டேன். நிக்கனோர் பார் ராவின் குறிப்பிடத்தக்கக் கவிதைகளில் ஒன்று
I take back everything I said
Before I go
I'm supposed to get a last wish:
Generous reader
burn this book
It's not at all what I wanted to say
Though it was written in blood
It's not what I wanted to say.
No lot could be sadder than mine
I was defeated by my own shadow:
My words took vengeance on me.
Forgive me, reader, good reader
If I cannot leave you
With a warm embrace. I leave you
With a forced and sad smile.
Maybe that's all I am
But listen to my last word:
I take back everything I`ve said.
With the greatest bitterness in the world
I take back everything I`ve said.
- translated by Miller Williams
எனது மொழிபெயர்ப்பு
திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்
நான் போகும் முன் என் கடைசி ஆசையை
நிறைவேற்றுவீர்களா நல்வாசகரே?
இந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்.
நான் சொல்ல வந்தது இதுவல்ல.
இது உதிரத்தால் எழுதப்பட்டிருந்தாலும்
நிச்சயமாக நான் சொல்ல வந்தது இதுவல்ல.
என்னை விடப் பாவப்பட்டவர் எவருமில்லை
என் நிழல்களாலேயே நான் தோற்கடிக்கப் பட்டேன்
என் சொற்களே என்னைப் பழிவாங்கின.
உங்களைக் கட்டியணைத்து விடை பெறாமல்
வறட்டுச் சிரிப்புடன் விடைபெறுவதற்காக
என்னை மன்னித்துவிடுங்கள் வாசகரே.
அது தான் நானோ என்னவோ.
ஆனால் நான் இறுதியாய்ச் சொல்வதைக் கேளுங்கள்
நான் சொன்னதனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்
உச்சக்கட்டக் கசப்புடன் இதுவரை
நான் சொன்னதனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு காவிய ஆசிரியனின் துயரத்தையும் இந்தக் கவிதை வெளிப்படுத்துவதாகத் தோன்றியது.
No comments:
Post a Comment