Friday, October 23, 2015

சிவவாக்கியரும் பாரதியும்

தமிழ் இலக்கியத்தில் சித்தர் பாடல்கள் ஒரு தனி இழை. எத்தனை சித்தர்கள் இருந்தார்கள், பதிணென் சித்தர்கள் யார் யார் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. பொதுவாக இவர்கள் பாடல்கள் பெருமதங்களுக்கு எதிரான கருத்துக்களை நிறுத்துபவை.

சித்தர்களில் சிவவாக்கியர் சற்று தனித்து நிற்பார். எளிமையான சொற்கள், சட்டென்று பற்றிக்கொள்ளும் ஒரு தாளம், கூர்மையான சமூக விமர்சனம் ஆகியவை இவரது பாடல்களின் தனித்துவம். உருவ வழிபாட்டைத் தன் பாடல்களில் பலவாறு கிண்டல் செய்தவர். அவற்றில் ஒரு பாடல்

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே
ஒரு கல்லை இரண்டாய் உடைக்கிறீர்கள். அவற்றில் ஒன்றை வாசலில் பதித்து மிதிக்கிறீர்கள். இன்னொன்றைக் கடவுள் எனச் சிலை செய்து கும்பிடுகிறீர்கள். இவற்றில் ஈசனுக்குகந்த கல் எதுவென்று கிண்டல் செய்கிறார்.

பாரதியும் இந்த இரண்டு கல் கோட்பாட்டைக் கையிலெடுக்கிறான். ஆனால் அவனுக்குச் சக்தி தெய்வம்.  அதனால் தான் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகத்தில் பராசக்தியை வணங்கும் போது

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
  றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
  றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
  கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
  இருங்கலைப் புலவனாக் குதியே
என்று பாடுகிறான்.

 சிற்பி ஒரு கல்லை வாயிற்படி என்று மறைத்தான். இன்னொன்றைக் கடவுளின் வடிவமென்று உயர்த்தினான்.  நீ எல்லோருக்கும் தாய். யாரை எங்கே, எப்படி வைக்க வேண்டுமென்று உனக்குத் தெரியும். அதனால் உன்னைச் சரணடைந்தேன், என்னைப் புலவனாக்கு என்று வேண்டுகிறான்.

இன்று நான் இருக்கும் மனநிலையில் நான் சிவவாக்கியர் பக்கம் தான். ஆனால் இரண்டு பாடல்களையும் படிக்கும் போது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடலின் எதிரொலி இருபதாம் நூற்றாண்டுப் பாடலில் கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கேட்குமா என்பது சந்தேகம் தான்.

6 comments:

  1. Anonymous5:04 PM

    "உருத்தரித்த நாடியில் ஒடுங்கின்ற வாயுவை
    கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
    விருத்திராகும் பாறாவர் மேனியும் சிவந்திடும்
    அருட்டரித்த நாதர்பாதம் அம்மை பாதம் உண்மையே"

    This is another famous song from Siva Vaakiyar. The last line doesn't give an impression of someone with a rebellious streak, does it? Have you also found such claims in his other songs?

    - Ananth (@ananthrk)

    ReplyDelete
  2. Anonymous6:29 PM

    நல்ல பதிவு. பாரதி = தெளிந்த சிந்தனை, தேவையற்றவைகளையெல்லாம் நீக்கி விட்டு சாரத்தை தக்கவைத்துக் கொண்டு -( கலை, மொழி கலாச்சாரம் என்று எதுவாயினும்) பார்க்கும் பார்வை. பல வகை மனிதர்களைச் சந்தித்து அவர்களுடைய மாறுபட்ட கருத்துக்களையும் கேட்பவராகத் தெரிகிறார் (குறிப்பாக அவரது கட்டுரைகளிலிருந்து தெரியும் உருவம்). இன்றைய "ஆட்டு மந்தைச்" சூழலில் என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் தேவை.

    சிவவாக்கியர் பாடல்களையும் என்னால் ரசிக்க முடிகிறது. ஆயினும், சித்தர்கள் ஒரு வித மனப்பக்குவத்தை அடைந்தவர்கள், சமூகம் என்ற கோட்பாட்டுக்குள் நில்லாதவர்கள். அந்த மனநிலைக்கு வந்த பின் எதை வேண்டுமானாலும் உதறி விடலாம். அனால் அங்கே செல்வதற்கு முன்னரே, வெறும் வார்த்தைகளை வைத்து அவர்களைப் புரிந்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
    - Vidya

    ReplyDelete
  3. அவர் நாத்திகர் அல்லர். எல்லாப் பாடல்களிலுமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணரச் சொல்லி தான் பாடுகிறார். வைதிகச் சடங்குகளையும் உருவ வழிபாட்டையும் தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.

    தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

    ReplyDelete
  4. Vidya - சித்தர் பாடல்கள் முழுவதும் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியாது. சிவவாக்கியரின் உதாரணத்தை பாரதி எடுத்தாண்ட விதம் பிடித்திருந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. முன்னும் பின்னுமாய்த் தமிழ்க் கவிதைகளைப் படிக்கும் போது இது போல் திடீரென்று ஏதாவது கண்ணில் படும். பாயாசத்தில் முந்திரி கண்டது போல :-).

    ReplyDelete
  5. Anonymous5:28 PM

    Thanks. Having not read many of his poems, I would not have caught that nuance! BTW, ‘உள்ளிருக்கும் நாதனை’ - pun intended??

    - Ananth (@ananthrk)

    ReplyDelete
  6. Anonymous8:36 AM

    இதே போல பாரதிதாசனின் திருவாரூர்த் தேர் மற்றும் சில சிவவாக்கியர் பாடல்களிலும் சில கருத்துக்கள்.

    ஆத்திகம்-நாத்திகத்துக்காக இல்லை. ஒரு devil's advocate ஆக பார்த்தால், உருவம் வேண்டாமென்றால் நமச்சிவாய, மந்திரம் எதற்கு? சரியை யோகம் என்ற வகைமுறைகளும் தேவையற்றவை என்றும் கேட்கலாமே? இது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை!
    -வித்யா

    ReplyDelete